மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, நற்பண்புகளை கற்றுக்கொடுத்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் புவனா, அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும் கலைமதி தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு முறையாக வராதது தொடர்பாக இடைநிலை ஆசிரியை கலைமதி குறித்து, தலைமை ஆசிரியர் புவனா வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கடந்த ஜூலை 30-ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே வாக்குவாதமாக வெடித்தது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் முன்னிலையிலேயே கலைமதி, தலைமை ஆசிரியர் புவனாவின் சேலையைப் பிடித்து இழுத்து தாக்கினார். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் அதிர்ச்சியுடன் இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த காட்சிகளை அங்கிருந்த மற்றொரு ஆசிரியர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளி வளாகத்தில் இவ்வாறு மோதிக்கொண்ட சம்பவம் கல்வித்துறையின் ஒழுக்க நெறிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read: உங்க குழந்தைங்க அடிக்கடி கோபப்படுறாங்களா? இதுக்கு காரணம் பெற்றோர் செய்யும் இந்த ஒரு தவறு தான்!



