கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புத்தந்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராஜு ஜோசப் டென்சி. இவர், வெஞ்ஞாரா மூடு பகுதியைச் சேர்ந்த அஞ்சு என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு டேவிட் என்கிற 9 மாத குழந்தை இருந்தது. சம்பவத்தன்று வீட்டின் பாத்ரூமில் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்திருக்கிறார்கள். பாத்ரூமில் அஞ்சுவும் டேவிட்டும் தீயில் கருகி சடலமாக கிடந்திருக்கிறார்கள். உடனே அவர்கள் கடினங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதற்கிடையே, அஞ்சுவின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ராஜூவுக்கு வேறு சில பெண்களோடு தொடர்பு இருந்தது. இதனால் அஞ்சுவுக்கும் ராஜூவுக்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில்தான் என் மகளும் பேரனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி பாத்ரூமில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என் மகள் கோழை அல்ல. என் மகள் சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.