சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை மையத்தை அமைச்சர் அருண் ராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் ‘கில்லி’ பட காட்சி திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நேற்று (ஜூலை 17) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை (High-pressure oxygen therapy)மையத்தைத் திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் அதிக அழுத்தத்தில் தூய ஆக்சிஜனை சுவாசிக்க உதவும். சர்க்கரை நோயால் ஏற்படும் ரணங்கள் விரைவாக ஆற இந்த சிகிச்சை பெரும் உதவியாக இருக்கும். இதேபோல், தீக்காயங்கள், கடுமையான தொற்றுகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் காயங்களுக்கும் இதன்மூலம் சிகிச்சை வழங்க முடியும்.இந்த கருவி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, மற்றும் கோவை அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து இப்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்காக சுமார் 1 முதல் 2 மணி நேரம் வரை நோயாளிகள் இந்த அதிநவீன இயந்திரத்தில் படுத்திருக்க வேண்டும்.நோயாளிகள் சிகிச்சை நேரத்தில் நேரத்தை பயனுள்ளதாகவும் பொழுதுபோக்காகவும் கழிக்க, சிகிச்சை கருவியின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த திரையில் முதலமைச்சர் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தின் காட்சிகள் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. எனினும், அரசு மருத்துவமனை நிகழ்வுகளில் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் நடித்த திரைப்படங்கள் திரையிடப்படுவது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


