ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வட மாநில இளைஞர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள். இங்கே பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களாக உள்ளனர்.
இவர்களை குறி வைத்து புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வந்த நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கையின் காரணமாக, தற்சமயம் புகையிலை பொருட்களின் பழக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள்.
அதேசமயம் பீடாக்கடைகள் மற்றும் ஒரு சில வீடுகளில் அஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை அதிகரித்து இருக்கிறது. கஞ்சா சாக்லேட்டை பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதற்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
இது குறித்து பொதுமக்கள் சிலர் தெரிவித்ததாவது, ஓசூர் பகுதியில் சில பீடா கடைகளில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாக்லேட் வெளி மாநிலத்தில் தயாரிக்கப்படும் இதனை வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாங்கி வந்து மறைமுகமாக விற்பனை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதனை பயன்படுத்தும் நபர்களால் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறும் அபாயம் இருக்கிறது. இதனை காவல்துறையினர் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை வட்டாரங்களில் சிலர் தெரிவித்ததாவது, கஞ்சா சாக்லேட் என்பது சிறிய உருண்டையாக இருக்கும். வட மாநிலங்களில் இதை பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. அதோடு, அங்கு இயல்பாக விற்பனை செய்யப்படுவதோடு திருமணம் உள்ளிட்ட விழாக்களில் இதனை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஓசூரில் கஞ்சா சாக்லேட்டை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனை அங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். இதை தடுப்பதற்கு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.