கரூர் கோவையில் மாற்றுக் கட்சியினரை திமுகவுக்குள் இழுக்கும் பணியை செந்தில் பாலாஜி தீவிரப்படுத்தியுள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி கரூரில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார்.
அந்த வகையில் மதிமுக மாவட்ட நிர்வாகி ரவி, பாஜக பூத் கமிட்டி பொறுபாளர் சண்முகம் , அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடந்த வாரம் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்க திமுக தலைமை தயக்கம்காட்டி வந்தது. மதிமுகவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோவிடம் அதிகாரம் பெருகுவதை விரும்பாத மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியபோதும், அவர்களை அரவணைக்க திமுக தயாராக இல்லை.
இந்தச் சூழலில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோரை திமுக சமீபத்தில் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது. இதனால் மதிமுகவில் சலசலப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதியான இன்று கரூர் பஞ்சமா தேவி பகுதியில் அதிமுக கிளை அவைத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட அதிமுக, தவெகவினர் பலரும் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். மாற்று கட்சியினரை திமுகவுக்கு இழுக்கும் இந்த அதிரடி ஆட்டம் கரூரை தொடர்ந்து கோவையிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.