என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து தனிப்படை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசீஸ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அஜித் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா என்ற பெண்மணி மீது மோசடி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் ஜி கூறியுள்ளது திரும்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிவிட்டார். பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே எங்கோ சென்று விட்டார். என்னை மட்டுமல்ல, 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார் நிகிதா. திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் விடுவார்.பின்னர், திருமணம் செய்தவர்கள் மீது வரதட்சணை புகார் கொடுத்து, அந்த குடும்பத்தை சித்திரவதைக்கு உள்ளாக்குவார். மிரட்டி பணம் பறிப்பது தான் அவரது வேலை. திருமண மோசடி மட்டுமின்றி, பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர்.
கோயில் காவலாளி விவகாரத்தில், புகார் கொடுத்தவர் குறித்து போலீஸார் விசாரித்திருக்க வேண்டும். நகை திருடுபோனது பொய்யான குற்றச்சாட்டு. கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், தனது ஆளுமையை நிலைநாட்ட புகார் கொடுத்துள்ளார். கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும், நிகிதா குடும்பத்தை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். நிகிதா தந்தை கோட்டாட்சியராக இருந்தவர். அவரது அம்மா அரசு ஊழியர். அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே, திருமண மோசடியில் 2 எஸ்.பி.கள், ஒரு டிஎஸ்பி உதவி செய்தனர் என்றார்.