நம் முன்னோர்களின் ஆரோக்கியத்தில் சிறு தானியங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. காலங்காலமாக நம் முன்னோர்கள் உண்டு வளர்ந்தது நெல் சோறு அல்ல, இன்று சிறுதானியங்கள் என்று நாம் சொல்கிறோமே அவைதான். பெயரில்தான் இது சிறுதானியம். நிலத்தில் போட்டாலும் வயிற்றில் போட்டாலும் இது தரும் பலனால் எப்போதுமே பெருந்தானியமாக திகழ்கிறது. இன்றைய சூழலில் அரிசி உணவு, ஃபிரைடு ரைஸ், பிரியாணி, பரோட்டா, பீஸ்ஸா, பர்கர் என்று நம் உணவு பழக்கத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு, சிறுதானியங்கள் என்பவை முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கொழிந்து போன தேவையற்ற உணவுப் பொருள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு. சிறுதானியங்களை நாம் பயன்படுத்தாமல் போன காரணத்தினாலேயே இன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஏன் சிறு குழந்தைகள் கூட நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

காலங்காலமாக நம் முன்னோர் உண்டு வந்த உணவை நாம் உண்ணும் போது நம் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கும் அது ஏற்றதாக இருப்பதால் நமது செரிமான மண்டலமும் சிறப்பாகச் செயல்படும். எனவே, எப்படிப் பார்த்தாலும் சிறுதானியங்கள் நம் உடலுக்கு ஏற்ற நண்பன்தான். இந்த சிறுதானியங்களை நம் உணவுப் பழக்கமாக மீண்டும் கொண்டு வந்து நோயற்ற வாழ்வை வாழ என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…
சிறுதானியங்கள் எவை, அவற்றின் பலன்கள் என்ன?
தானியங்களில் கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்கள். இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எளிதில் செரிமானம் ஆககூடியவை.

சிறுதானியங்களில் . உடலுக்கு மிகவும் இன்றியமையாத புரதச்சத்து, செரிமானத்துக்கு அவசியமான நார்ச்சத்து, ஊட்டம் தரும் வைட்டமின் சத்துக்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துகள் ஆகிய அனைத்தும் நிறைந்த ஒரு காம்பேக்ட் உணவுப் பொருளாக இந்த சிறுதானியங்கள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவை கிளைசெமிக் இண்டக்ஸ் என்ற அளவால் குறிப்பார்கள். அரிசியில் உள்ள மாவுச்சத்தோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து ரத்தத்தில் கரையும் விகிதம் மிகவும் குறைவு என்பதால் இதன் கிளைசெமிக் இண்டக்ஸ் மிகவும் குறைவு. இதனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களின் நண்பன் என்றே சிறுதானியங்களைச் சொல்லலாம்.
சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்
சிறுதானியங்கள் என்றால் எப்போதும் களியோ கூழோதான் செய்ய வேண்டும் என்று இல்லை. இன்று சிறுதானியங்களிலேயே இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், ஊத்தாப்பம், கொழுக்கட்டை, பிரியாணி, பொங்கல், வடை என விதவிதமாகச் செய்யும் பழக்கம் மெல்ல அதிகரித்துவருகிறது. குழந்தைகளுக்கும் இதுபோன்ற விதவிதமான டிஷ்களை செய்து கொடுத்து அசத்தலாம். இதனால் சிறுதானிய ருசி மெல்ல மெல்ல அவர்களுக்குப் பழகும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற எல்லா சத்துகளும் இதில் நிறைந்துள்ளதால் ரத்தசோகை உட்பட ஊட்டச்சத்து குறைபாடால் உள்ள பல்வேறு பிரச்சனைகள் நீங்கும்.

சிறுதானியங்களில் ஒன்றையே செய்து கொண்டிருக்காமல், வெவ்வேறு வகை சிறுதானியங்களை வெவ்வேறு முறையில் பயன்படுத்தலாம். தினசரி ஏதேனும் ஒருவேளை சிறுதானியத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்றாலும் தொடக்கத்தில் வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாட்கள் என்று அறிமுகப்படுத்தி பின்னர் மெல்ல மெல்ல உணவில் சேர்த்துக்கொள்வதை அதிகரிக்கலாம். சிறுதானிய உணவை மீண்டும் உணவு பழக்கத்தில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.