ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷிவ்நரின் சந்தர்பாலின் மகன், தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால், முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆம் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராத்வேட் – தேஜ்நரின் சந்தர்பால் ஆகியோர் சதம் அடித்தனர்.
![’புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’..? தந்தையைப் போலவே இரட்டை சதம் அடித்து அசத்தல்..!! யார் தெரியுமா..?](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/WhatsApp-Image-2023-02-07-at-8.43.00-AM.jpeg)
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. கேப்டன் பிராத்வேட் 182 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் நங்கூரம் போல் நின்ற தேஜ்நரின் சந்தர்பால் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 447 ரன்கள் எடுத்தது. தேஜ்நரின் 467 பந்துகளை எதிர்கொண்டு 207 ரன்கள் எடுத்தார். அதில், 16 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். இதன்மூலம், தந்தை ஷிவ்நரின் சந்தர்பால் டெஸ்ட் போட்டியில் எடுத்த அதிக ரன் சாதனையையும் முறியடித்தார் தேஜ்நர். அவர், 203 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அவரது மகன் தேஜ்நரின் 207 ரன்கள் எடுத்துள்ளார்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதுபோல, தந்தையைப்போல டெஸ்டில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்திருக்கும் தேஜ்நரினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக அறிமுகமான தேஜ்நரின் சந்திர்பால் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தியிருந்தார்.