நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் ரூ.6,000/- வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். மேலும், சர்வதேச அல்லது தேசியப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்குப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அகில இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்தியப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவராக இருக்கலாம். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 2023-ம் வருடம் ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000-க்குள் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஒய்வூதியம் பெற தகுதி இல்லை. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) யில் விண்ணப்பித்து பயனடையலாம்.