இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களின் திருமணங்களை பதிவு செய்ய அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, 10.12.2018 முதல் திருமணப்பதிவுகள் Online மூலமே திருமணத்தரப்பினர்கள் விண்ணப்பித்து திருமண பதிவுகள் நடைபெறுகின்றன 10.12.2018 முதல் Star 2.0 மூலம் திருமண பதிவு செய்ய திருமண தரப்பினர்கள் இணையவழி உள்நுழைவில் திருமணப் பதிவுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்ததும் ஒரு தற்காலிக எண் உருவாகும் பின்னர் திருமணப்பதிவிற்கான விண்ணப்பத்தை அச்சுப்பிரதி எடுத்துக்கொள்ளலாம். மேலும் திருமணப்பதிவிற்காக தேவையான நாள் மற்றும் நேரம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவு செய்த தேதியில் சம்மந்தப்பட்ட நபர்கள் திருமணப்பதிவிற்கு தொடர்புடைய அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இளநிலை உதவியாளர்/உதவியாளர் தனது உள்நுழைவில் அத்திருமணத்திற்கான விவரங்களை சரிபார்த்து குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான காரணத்தை குறிப்புரை என்ற கலத்தில் பூர்த்தி செய்து சார்பதிவாளர் உள்நுழைவுக்கு அனுப்ப வேண்டும். சார்பதிவாளர் தன் உள்நுழைவு வழியே இத்திருமணத்தை எடுத்து அதற்கு தேவையான விவரங்களையும் ஆதாரங்களையும் சரிபார்த்து திருப்தி அடைந்த நிலையில் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தற்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நடைபெறும் திருமணங்களைப் பதிவு செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால் பதிவுத்துறையின் சார்நிலை அலுவலகர்களுக்கு விரைவில் திருமணங்களை பதிவு செய்ய உரிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்க அயலக தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு நடைபெறும் திருமணங்களைப் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாம்களின் விவரப்பட்டியல், முகாம்களில் திருமணங்கள் பதிவு செய்ய காத்திருக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக, சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வேலை நாட்களாக உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், வரும் 26-ம் தேதியும், வேலை நாட்களாக இல்லாத இதர அலுவலகங்களில், 25-ம் தேதி வெள்ளிக்கிழமையும் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்த, பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை, திருமண பதிவுக்காக காத்திருக்கும் இலங்கை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.