தமிழகத்தில் விற்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எவ்வித குறைபாடும் இல்லை என்று மாநில மறுத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாத்திரை, மருந்துகளின் தரம் குறித்து மே மாதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது. இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாத்திரை, மருந்துகள் என்று 15 தயாரிப்புகளுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் தரமற்ற மருந்துகள் விற்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் விற்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த குறைபாடும் கிடையாது என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அன்றாட நோய்களுக்கு பயன்படுத்தும் இம்மருந்து குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் மக்கள் இடையே சிறிது பதட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், தரக்குறைவான எந்த மாத்திரையும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், “எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரை இன்றி எடுத்துக்கொள்ளக்கூடாது” எனவும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி மருந்துகளை பயன்படுத்தலாம் என்றும், சந்தேகமான மருந்துகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவ அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.