நாம் உண்ணும் உணவு நமது பசியைத் தணிப்பதற்காக மட்டுமல்ல, நமது எதிர்கால ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. ஆனால், பல நேரங்களில் நாம் சுவையின் வலையில் சிக்கி, நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் மூழ்கிவிடுகிறோம். இத்தகைய பழக்கங்கள் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில வகை உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது புற்றுநோயின் அபாயத்தை ஓரளவிற்கு குறைக்க உதவும். அப்படியானால், அந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க நாம் என்ன சாப்பிட வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? என்று பார்ப்போம்.
இனிப்புகள், குளிர்பானங்கள் : நீங்கள் அதிக சோடா, இனிப்புகள் மற்றும் பேஸ்ட்ரிகளைச் சாப்பிட்டால், உங்களுக்குத் தெரியாமலேயே உடல் எடை கூடும். உடல் பருமன் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கொழுப்பு அதிகரிக்கும்போது, உடலில் அழற்சி ஏற்பட்டு, ஹார்மோன் முறைகள் மாறுகின்றன. இந்த மாற்றங்கள் புற்றுநோய் செல்கள் வளர காரணமாகின்றன.
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள்: கோழி அல்லது இறைச்சியை எண்ணெயில் பொரிக்கும்போது அல்லது வறுக்கும்போது அபாயகரமான இரசாயனங்கள் வெளியாகின்றன. இவை நமது செல்களில் உள்ள டிஎன்ஏ-வை நேரடியாக சேதப்படுத்துகின்றன. அதனால்தான் முடிந்தவரை வேகவைத்த மற்றும் ஆவியில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
பதப்படுத்தப்பட்ட, சிவப்பு இறைச்சி: தினமும் காலை உணவாக பேக்கன், சாசேஜ் அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியைச் சாப்பிடுவது பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இவற்றை நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் பதப்படுத்திகள், நமது உடலுக்குள் செல்லும்போது நச்சுகளாக மாறுகின்றன. மேலும், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியை அதிகமாகச் சாப்பிடுவதும், அவற்றை அதிக வெப்பநிலையில் வறுத்துச் சாப்பிடுவதும் ஆபத்தானது. இது புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களை உருவாக்குகிறது.
ஆல்கஹால் : எந்த வடிவத்தில் இருந்தாலும், ஆல்கஹால் மார்பகம், கல்லீரல் மற்றும் வாய் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்ளும்போது, அது உடலில் செயலாக்கப்படும்போது டிஎன்ஏ-வை சேதப்படுத்தும் ஒரு இரசாயனத்தை உருவாக்குகிறது. குறைவாகக் குடிப்பது கூட ஆபத்தானது.. எனவே, அதிலிருந்து எவ்வளவு விலகி இருக்கிறீர்களோ, அவ்வளவு பாதுகாப்பானது.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகள்:
கொழுப்பு நிறைந்த மீன்கள்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கின்றன. இந்த மீன்கள் வைட்டமின் டி-யையும் வழங்குகின்றன. இது புற்றுநோயின் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது.
பருப்பு வகைகள்: இவை ஒரு சிறந்த, மலிவான உணவு. இவற்றில் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூலம் செல்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள்: இந்த உணவுகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. பெர்ரி பழங்கள், கீரைகள், தக்காளி மற்றும் சிட்ரஸ் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இந்த உணவுகளில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யவும், பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.
காலிஃபிளவர் வகைக் காய்கறிகள்: ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இவற்றில் உள்ள சிறப்பு சேர்மங்கள் உடலில் உள்ள நச்சுக்களை உடைத்து வெளியேற்றுகின்றன. இவற்றை வாரத்திற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறையாவது சாப்பிடுங்கள்.
முழு தானியங்கள்: வெள்ளை அரிசிக்கு பதிலாக, பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோளம் மற்றும் கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டிகளைச் சாப்பிடுங்கள். இவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தைப் பேணுவது மட்டுமல்லாமல், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க இவை சிறந்த தேர்வுகளாகும்.



