இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடுதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவு செய்யும் 2-வது மாநிலமாக உள்ளது. இப்போது, 14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிக அரசு ஊழியர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு 1 – தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு 2- தமிழ்நாட்டில் பென்ஷன் வாங்குபவர்களுக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்றை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பென்ஷன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
இதற்காக கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் புகைப்படம் இல்லை. புகைப்படம் இல்லாத வெறும் பெயர் மட்டும் கொண்ட அடையாள அட்டை உள்ளது. இதனால் இன்சூரன்ஸில் முறைகேடு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்று மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை புகைப்படத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இதற்கான படிவங்களை டவுன்லோட் செய்ய முடியும். அந்த படிவங்களை நிரப்பி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதில் போட்டோவை பதிவேற்றுவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் கொடுப்பட்டு இருக்கும். உங்களுடைய போட்டோ அப்டேட் செய்யப்பட்ட பின், நீங்களே ஆன்லைன் வழியாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் உங்கள் புதிய அடையாள அட்டையை பெற முடியும்.
அறிவிப்பு 3: அடுத்த அதிரடியாக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பக்கம் ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். இந்த அறிவிப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே பெரிய அளவு வரவேற்பை பெற்றுள்ளது.