மீனவ இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான பதவிகளுக்கான போட்டித்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் தேர்வர்கள் இத்தேர்வை எழுதி வருகிறார்கள். இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் கடுமையான தேர்வாக இத்தேர்வு உள்ளது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டமாக சுமார் 1 வருடத்திற்கு தேர்வு நடைபெறும்.
மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தையும், அரசு வழிகாட்டுதல்களையும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.



