மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது. இன்று வரை அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.