தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புக் குழுக்கள், 24×7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் இரவு பகலாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அரசுப் பணியாளர்களை ஊக்கமளிக்கும் வகையில் அவர்களின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு (Presiding Officer) ரூ. 3,000-மும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு (Polling Officers) ரூ. 2,600-மும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்களுக்கு (Supervisors) ரூ. 1,500, உதவியாளர்களுக்கு ரூ. 1,400 மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது.
வெப்ப அலை மற்றும் கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read more: Summer Tips| வெயிலில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் மறக்காம இத செய்ங்க.. நிபுணர் சொல்லும் குறிப்பு!



