தூய்மை தமிழ்நாடு நிறுவனம் அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு அங்கீகரிப்பதற்காக தகுதி உடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தினை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
தூய்மை இயக்கத்தின் கீழ் செயல்படும் தூய்மை தமிழ்நாடு நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான கழிவு மேலாண்மையை கட்டமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக மற்றும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும் அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்களையும் மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களையும் தேர்வு செய்து அவற்றின் பட்டியல்கள் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளது. எனவே தொடர்புடைய தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://thooimaimission.com/partnerships என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடைய நிறுவனங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்கள் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாகவும் முறைசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்தும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கழிவுகளை மறுசுழற்சி செய்வதையும் அப்புறப்படுத்துவதையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: யுபிஎஸ்சியில் 850 + காலியிடங்கள்..!! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.56,100 சம்பளம்..!!