தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது.
இதில் சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகை திங்கள்தோறும் வழங்கப்படும். மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள் அல்லது தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி உள்ளது.
விடுதியில் உள்ள ஒழிவிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் அல்லது அஞ்சலில் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 27.06.2025 வெள்ளிக்கிழமைக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: 2026 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தனது அறிக்கை…! 7-வது மாநில நிதி ஆணைய குழு அமைத்த தமிழக அரசு…!