மக்களின் ஆரோக்கிய நலனையும், உழவர்களின் வாழ்வாதார வளர்ச்சியையும் முக்கியமாகக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 4, 2025 அன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்த தகவல்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, அவரை, காராமணி போன்ற பயறு வகை விதைகள், காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்புகள் இவையனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இவை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதுடன், ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களின் விளைவையும் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், பயறு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு 2000 பயனாளிகளுக்கும், 34,350 காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும் 21,150 பழச்செடிகள் தொகுப்புகள் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரந்த அளவிலான விநியோகம், திருநெல்வேலி மாவட்டத்தின் வேளாண்மையை புதிய பரிணாமத்திற்குத் தூண்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமுள்ள நபர்கள், உழவன் செயலியிலோ அல்லது https://tnhorticulture.tn.gov.in என்ற வலைத்தளம் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலுடன் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.