கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் கொரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் வேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 வகை தொற்றுகளுமே அதிக வீரியம் இல்லாதவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான், சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் இதுவரை 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் கொரோனா குறித்தான அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். தொற்று அறிகுறி தென்படுவோரிடம் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது இடங்களில் கைக்குட்டைகளை வைத்து மறைத்து கொண்டு இரும்ப வேண்டும். பருவகால காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.