விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் சுடுகாடு பகுதியில் இருக்கின்ற ஏரியில் சென்ற 6ம் தேதி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியின் போது அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக செஞ்சி டிஎஸ்பி கவினா, கஞ்சனூர் காவல்துறை ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையின் அறிக்கையில் அந்த பெண் 3 மாதம் கருவுற்ற நிலையில், கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தித்தாள்களில் செய்திகள் வெளியான நிலையில், கொலை செய்யப்பட்டது விழுப்புரம் அருகே கண்டமானடியை சேர்ந்த 17 வயது சிறுமி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், சிறுமி 12ம் வகுப்பு செல்ல இருந்ததும். கோடை விடுமுறைக்காக அரியூரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் செஞ்சி அருகே சித்தேரிப்பட்டை சேர்ந்த அகிலன் (23) என்ற இளைஞரை காதலித்து வந்த விவரமும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் தான் தலைமறைவாக இருந்த அகிலனை சென்னையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தனர். அதாவது, கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுமியும், இளைஞர் அகிலனும் சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே மிக நெருங்கிய பழக்கம் இருந்து வந்ததால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார்.
இதனால் அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞர் அகிலனை கட்டாயப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து சம்பவம் நடைபெற்ற கடந்த 6-ம் தேதி திருமாவத்தூர் கோவில் அருகே அகிலன் அந்த சிறுமியை வரச் சொல்லி இருக்கிறார்.
ஆனால் காதல் ஜோடி இடையே அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆவேசமடைந்த அகிலன், அந்த சிறுமியை தாக்கியதில் கீழே சுருண்டு விழுந்த சிறுமி அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு பயந்து போன அகிலன், காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
ஆகவே தன்னுடைய நண்பர் சுரேஷ்குமார்( 22) என்பவரின் உதவியுடன் மேலும் ஒருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு, அன்று இரவே இருசக்கர வாகனத்தில் அந்த மாணவியின் உடலை நடுவில் அமர வைத்த நிலையில், வைத்துக் கொண்டு, சாலவனூர் சுடுகாடு அருகே இருக்கின்ற பகுதிக்கு கொண்டு சென்று புதைத்திருக்கிறார்கள். பல தினங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்கள் காவல்துறையிடம் சிக்க மாட்டோம் என்று மிதப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அகிலன், சுரேஷ்குமார் உள்ளிட்ட இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகிறது.