சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 28). இவர் சென்னை அரும்பாக்கத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரி ஊரை சேர்ந்த பெரியசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. அதன் பின்பு பெரியசாமி அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலைக்கு சேர்ந்தார்.
இருவரும் அம்பத்தூரில் தனியாக வாடகை வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பெரியசாமியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மீனாட்சியிடம், நான் ஊருக்கு சென்று பெற்றோரை சமாதானம் செய்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார். அதன்பிறகு அவர் சென்னைக்கு திரும்பி வரவில்லை.
அவர் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார், அதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதை அறிந்த மீனாட்சி விராலிமலைக்கு சென்று பெண் வீட்டாரிடம் எடுத்துக் கூறி நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு மீனாட்சியை அணுகிய பெரியசாமியின் குடும்பத்தினர் சமாதானம் பேசி கொள்வோம் என்று கூறி உள்ளனர். ஆனால் அதன்பிறகு மீனாட்சியை குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் செய்தார். புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..! 50 ஆண்டுகால திரையுலக பணிக்கு புகழாரம்!



