இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்.13 ஆகிய தேதிகளில்) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சுமார் 1,300 சர்வதேசச் செய்தியாளர்களுக்கு, இந்தியப் பாரம்பரியத்தையும் கைவினைப் பொருட்களையும் பறைசாற்றும் வகையில் 9 சிறப்புப் பொருட்கள் அடங்கிய அன்புப் பரிசுப் பை வழங்கப்படுகிறது.
இந்த சிறப்புப் பையில் இந்தியாவின் உணவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பீகாரின் சத்து மாவு மற்றும் தாமரை விதை தின்பண்டமான மகானா (Makhana) ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், ஒடிசாவின் பழங்குடியினர் வாழும் மலைப்பகுதிகளில் விளைவிக்கப்பட்ட 100% அரபிகா காபி தூளும், குஜராத்தின் கைவினைத் திறனை விளக்கும் ‘பிளாக் பிரிண்ட்’ துண்டும் (Stole) இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
வெறும் கலாச்சாரக் குறியீடுகளாக மட்டுமின்றி, பயன்பாட்டுப் பொருட்களுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டைச் சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு உதவும் வகையில், மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியுடன் கூடிய ‘இன்-பில்ட் சார்ஜிங் போர்ட்’ கொண்ட தோள்பை மற்றும் ஒரு காபி கப் ஆகியவை இதில் வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் பாரம்பரிய உணவு, கைவினைப் பொருட்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்ப வசதிகளை ஒன்றுசேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பரிசுப் பை, மாநாட்டிற்கு வரும் உலக நாடுகளின் பிரதிநிதிகளைப் பெரிதும் கவரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.


