செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதால், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அது ஒட்டுமொத்த மனித இனத்தையே பூண்டோடு அழிப்பதற்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர் இவான் ஹுபிங்கர் எச்சரித்துள்ளார். தற்போதைய மாடல்களால் ஆபத்து குறைவு என்றாலும், எதிர்காலத்தில் மனிதக் கட்டுப்பாட்டை மீறித் தானாகவே மேம்படும் ஏஐ அமைப்புகள் பேரழிவை உண்டாக்கக்கூடும் என்ற அவரது பதிவு உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகிய ஆய்வாளர் ஜேக்கோப் காக்சன், முன்னணி ஏஐ நிறுவனங்கள் எவையும் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்றும், எந்தவொரு துறையையும் புரட்டிப் போட்டு வளங்களை அபகரிக்கும் பேராற்றலை ஏஐ அமைப்புகள் விரைவில் பெற்றுவிடும் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக, மனிதர்களின் நெறிமுறைகளுக்கு ஏற்ப ஏஐ-ஐ வடிவமைக்கும் ‘அலைன்மென்ட்’ (Alignment) திட்டத்தில் இன்னும் தெளிவான முன்னேற்றம் எட்டப்படவில்லை என்பதை ஹுபிங்கரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சில சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கிங் முயற்சிகளை முன்னணி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஏஐ அமைப்புகள் தன்னாட்சியாகச் செயல்படுவதைத் தடுக்கும் வழிகாட்டுதல்கள் தோல்வியடைந்து வருவதாக வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் எதிரொலியாக, பிரிட்டன் அரசாங்கத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் அபாயகரமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான புதிய உடன்படிக்கை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜாகுப் பச்சோக்கி உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்ப ஆளுமைகளும் ஏஐ வளர்ச்சியில் தீவிர எச்சரிக்கை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், எதிர்காலத்தில் உலகை மனிதர்களின் முழு கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவும், வரம்பற்ற ஏஐ வளர்ச்சியைக் கண்காணிக்கவும் பன்னாட்டு அளவிலான கடுமையான நிர்வாகக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என ஏஐ நிறுவனங்களை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.



