திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சித்ரா(42). 12 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்த தலையில் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் இளைய மகள்(18) மட்டும் தாயுடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான கந்தன்(31) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.
இதனிடையே கடந்த 13ம் தேதி இரவு, வீட்டில் இருந்த சித்ராவும், அவரது இளைய மகளும் காணாமல் போய்விட்டனர். இதனால் பதறிப்போன மூத்த மகள், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சித்ராவின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்த போது, அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் கேரளாவுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தேயிலை தோட்ட பகுதியில் தாய், மகள் மற்றும் கந்தன் மூவரும் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில், “என் வாயில் துணி வைத்து, என் அம்மாவும் கந்தனும் சேர்ந்து என்னை கடத்தி கொண்டு போய்விட்டார்கள். அங்கு கந்தன் எனக்கு கட்டாயமாக தாலி கட்டி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான். இதற்கு என் அம்மா சித்ராவும் உடந்தையாக இருந்தார்” என்று கூறி கதறி அழுதுள்ளார்..
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சித்ரா மற்றும் கந்தனை கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் பாதுகாப்பாக அவரது மூத்த சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார். பெற்ற மகளை தாயே கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



