தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் முதன்முறையாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்..
இதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய பிரேமலதா “ தேமுதிக திமுக உடன் கூட்டணியை இறுதி செய்துள்ளோம்.. எங்கள் கழக தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பம் திமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான்.. கேப்டன் இல்லாத சூழலில் இந்த கூட்டணி உருவாகி உள்ளது. 2016 தேர்தலிலேயே இந்த கூட்டணி அமைய வேண்டியது.. அப்போதே கலைஞர் பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று கூறினார்.. 10 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி அமைந்துள்ளது.
திமுக – தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த சந்தோஷத்துடன் இந்த கூட்டணியை வரவேற்றுள்ளனர்.. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.. “ என்று தெரிவித்தார்..
தேமுதிக கட்சியை தொடங்கியதில் இருந்தே விஜயகாந்த் ஒருமுறை கூட திமுக உடன் கூட்டணி வைத்தது இல்லை.. கடந்த 2016-ல் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக கூறப்பட்டது.. ஆனால் அப்போது அது நடக்கவில்லை.. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இணையும் என்று கூறப்பட்ட நிலையில் திமுகவில் இணைந்த இந்த முடிவு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே வலுவாக இருக்கும் திமுக கூட்டணிக்கு இது வலு சேர்த்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து விசிக தலைவர் தொல், திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது. எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும். திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது. கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : Breaking : எம்.ஜி.ஆர் அதிமுக..! புதிய கட்சியை அறிவித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்..!



