அதிமுகவில் தாமரைக்கனி மகன் இன்பத் தமிழனுக்கு முக்கிய பதவி அளித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அன்றைய அதிமுகவின் அசைக்க முடியாத நபராக விளங்கியவர் தாமரைக்கனி. ஐந்து முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்எல்ஏவாக இருந்தவர் தாமரைக்கனி. காலசூழலால் ஜெயலலிதாவை எதிர்க்கும் நிலைமை தாமரைக்கனிக்கு ஏற்பட்டது. இதன் விளைவு… மகன் அதிமுக சார்பில் போட்டியிட, சுயேச்சையாக நின்று மகனிடம் தோற்று போனார் தாமரைக்கனி.
தந்தையும் – மகனும் கடைசி வரை சேராமலேயே போய்விட்டனர். தாமரைக்கனியும் இறந்துவிட்டார். மாவட்ட அதிமுக செயலாளராக இன்பதமிழனை பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. தொடர்ந்து அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவுடன் இன்பத்தமிழனுக்கு அதிருப்தி ஏற்பட்டு, திமுகவுக்கு சென்றார். திமுகவிலும் சரியாக இவர் கவனிக்கப்படாததால், திரும்பவும் அதிமுகவுக்கு வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் செல்வாக்கு இல்லை என்றதும், அமமுகவுக்கு வந்தார். அமமுகவின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. பின்னர் தேர்தலில் அமமுக தோல்வி அடைந்ததால் திரும்பவும் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் இன்பத் தமிழனுக்கு முக்கிய பதவி அளித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் அதிமுகவின் புரட்சி தலைவி பேரவை இணை செயலாளர் பதவியில் இரா.தா.இன்பத் தமிழன் நியமிக்கப்படுகிறார் என்றும், அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Read more: ட்ரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக ‘ஃபத்வா’ பிறப்பித்த ஈரான் மதகுரு.. அப்படின்னா என்ன?