கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே பாலக்கடவு பகுதியைச் சேர்ந்த சனலின் மனைவி ஆதிரா என்பவரை கடந்த 29ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது கணவர் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆதிராவை தேடி வந்தனர். விசாரணையில் எந்த பிடியும் கிடைக்காததால் ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்தனர். செல்போனை ஆய்வு செய்யும் போது, காணமல்போன நாளில் கடைசியாக ஆதிரா தனது கணவர் சனலின் நண்பரும், தன்னுடன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பவருமான அகில் என்பவருடன் பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஆதிராவின் வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது 29ஆம் தேதி ஆதிரா அகிலுடன் காரில் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அகிலை பிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நேற்று காலை அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். ஆதிராவை தான் கொலை செய்ததாகவும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாகவும் அகில் ஒப்புக் கொண்டுள்ளார். கொலைக்கான காரணத்தையும் அகில் கூறியுள்ளார்.
ஆதிராவும் அகிலும் அங்கமாலியில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது அகிலுக்கு பலமுறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் ஆதிரா பணமாகவும், நகையாகவும் அகிலுக்கு கொடுத்து உதவியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தது எதுவும் திரும்ப வராததால் ஆதிரா கடனை திருப்பிக் கேட்டுள்ளார். கடனை திருப்பிக் கேட்டதால் ஆதிரா மீது அகிலுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 29 ஆம் தேதி ஆதிராவுடன் போனில் பேசி காரில் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
அத்திரப்பள்ளி அருகே யாரும் இல்லாத இடத்திற்கு ஆதிராவை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தான் காவல்துறையிடம் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் ஆதிராவின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றிருக்கிறார். இந்த தகவல்களை அகில் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆதிராவின் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அகிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.