குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசு விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் ரேஷன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க கூறினால் மட்டும் போதும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில்; வங்கி கணக்கு இல்லாத நபர்கள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை ரேஷன் கடையில் பெற்று கொள்ளலாம். அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே கணக்கு உள்ளது என்றால் அந்த வங்கிக்கு சென்று, அவர்களின் ஆதாரை இணைக்க அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய வங்கியிலோ புதிய கணக்கு தொடங்க வேண்டும்.
அதை ஆதார் எண் உடன் இணைத்து, அந்த விபரத்தை அவர்களது ரேஷன் கடையில் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் கார்டுதாரர்களின் ஆதார் எண் விபரங்களை, எக்காரணத்தை முன்னிட்டும் கேட்கவோ மற்றும் ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது என சார்நிலை அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.