புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு. குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆவணங்கள் சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் அருகே கடந்த 6-ம் தேதி நின்றுகொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரை காவல்துறை ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் எனக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்னை தாக்கியது தொடர்பாக நான் அளித்த புகாரில் எதிர் தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை. பொய் புகாரில் காவல்துறை என்னை கைது செய்துள்ளது என மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை சென்னை பெருநகர எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார். வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறபித்த்திருந்தார்.
இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைச் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பிறப்பித்துள்ளார்.