16 மாணவர்களுக்காக 22 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது..!! நீட் மறுதேர்வு கோரிய வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

chennai high court

கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், “இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2025 நீட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் கடந்த மே 4 ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. சென்னை அருகே ஆவடியில் உள்ள ஶ்ரீகேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்கள் மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை நீட் தேர்வு எழுதினர். 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

தேர்வு மையத்தில் தற்காலிக மின் சேவைக்காக எந்தவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளவில்லை. எனவே குறைவான வெளிச்சத்தில் கடுமையான சிரமத்துக்கு இடையே தேர்வை எழுதினோம். தேர்வில் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட எங்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்,”என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்வதாக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறு தேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும் எனவும், மாணவர்களின் வழக்கு தகுதியானதாக இல்லை என்றும் கூறி வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Read more: இயக்குநர் பாரதிராஜா வீட்டில் அடுத்த அதிர்ச்சி.. உடன்பிறந்த சகோதரி காலமானார்..!!

Next Post

74 வயதிலும் பிரதமர் மோடி எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்? அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் இது தான்!

Fri Jun 6 , 2025
Pm Modi Fitness Secret : 74 வயதிலும் நரேந்திர மோடியைப் போல ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து தற்போது பார்க்கலாம்.. 74 வயதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் உடற்தகுதி மற்றும் ஆற்றலைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். தொடர்ந்து வேலை செய்தாலும் சரி, தொடர்ச்சியான சர்வதேச சுற்றுப்பயணங்களின் பரபரப்பான அட்டவணையில் இருந்தாலும் சரி, அவர் ஒருபோதும் சோர்வாக காணப்பட்டதே இல்லை.. அதிகாலையில் யோகா செய்வது […]
narendra modi 0

You May Like