தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. பிரதான கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.. தவெகவின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தற்போது பெரும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக அவர் எந்த தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற கேள்வி கட்சி தொண்டர்களிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், தனது கட்சி நிர்வாகிகளிடம் “நான் பெரம்பூருக்கு வருவேன்” என்று விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களிலும், கட்சி அமைப்பினரிடையிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் விஜய்யின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா? விரிவாக பார்க்கலாம்..
பெரம்பூர் தொகுதியின் அரசியல் பின்னணி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, நீண்ட கால அரசியல் வரலாற்றைக் கொண்டதாக கருதப்படுகிறது. கல்வியறிவு பெற்றவர்களும் தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் இந்த பகுதி, தேர்தல் அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இந்த தொகுதி பல ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாகவே உள்ளது.. 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில், , இங்கு நடைபெற்ற பல தேர்தல்களில் திமுக தான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதாவது திமுக 9 முறை வெற்றி பெற்றுள்ளது.. மா.கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், அதிமுக 2 முறையும் இந்த தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன..
விஜய் போட்டியிட்டால் நிலைமை எப்படி?
இத்தகைய அரசியல் பின்னணி கொண்ட தொகுதியில்தான் விஜய் போட்டியிட முடிவு செய்தாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அவர் உண்மையாகவே இங்கு களமிறங்கினால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
இந்த தொகுதியில் இளைஞர்கள் கணிசமான அளவில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 18 முதல் 30 வயதுக்குள் உள்ள வாக்காளர்கள் அதிகமாக இருப்பதால், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள விஜய்க்கு அது சாதகமாக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த தொகுதியில் முக்கிய எதிர்க்கட்சிகள் வலுவான வேட்பாளரை களமிறக்காவிட்டால், அந்தக் கட்சியின் வாக்குகள் மற்றொரு வேட்பாளருக்கு மாறும் வாய்ப்பும் இருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் விஜய்க்கு கூடுதல் ஆதரவு கிடைக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தொண்டர்கள் எடுத்த தீர்மானம்
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில், விஜய் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த தீர்மானத்துக்குப் பிறகு தான் “நான் பெரம்பூருக்கு வருவேன்” என்ற விஜய் கூறினாராம்.. அவரின் இந்த வார்த்தை, தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிறாரா அல்லது நேரடியாக அங்கு போட்டியிடப் போகிறாரா என்பது குறித்து தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இறுதி முடிவு எப்போது?
விஜய் உண்மையாகவே பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அவர் அந்த தொகுதியைத் தேர்வு செய்யலாம் என்ற தகவல் வெளியானதன் மூலம், அந்த பகுதியின் அரசியல் சூழல் இப்போதே சூடுபிடித்துள்ளது. அவரின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, பெரம்பூர் தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய கவனம் பெறும் தொகுதியாக மாறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Read More : ப.சிதம்பரம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. போலீசார் தீவிர விசாரணை..!



