2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. விஜய்யின் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராததால் தவெகவும் தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது.
முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. இந்த சூழலில் யூடியூப் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தவெக ஆதரவாளர்கள் சிலர் பங்கேற்று பேசி வருகின்றனர்.. மேலும் நெறியாளர்களின் கேள்விகளுக்கும் மற்ற அரசியல் கட்சியினரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாமல் தவெகவினர் சொல்லும் பதில்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர்.. குறிப்பாக தற்குறிகள் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.. இதுதொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகின்றன..
இந்த நிலையில் தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெக தலைமை அறிவித்துள்ளது.. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்றும் தவெக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தவெக தலைமையின் இந்த அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.. தற்குறிகள் என்று அம்பலப்பட்டு போனதால் தவெக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்..



