உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாகப் பயில முடியும். அந்த படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இருக்காதபடி அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணைய வழியில் பயிற்றுவிக்கப்படலாம்.
யுஜிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியும். இந்த வழிகாட்டுதல்கள் பிஎச்டி தவிர்த்துப் பிற படிப்புகளுக்குப் பொருந்தும். இவற்றைக் கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளைப் பயிலுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: பல பெண்களுடன் தொடர்பு.. கண்டித்த காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..!! சிக்கியது எப்படி..?