வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கா தீடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. கராகஸ் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் பறந்த நிலையில், 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.. அமெரிக்காவின் இந்த தாக்குதலை வெனிசுலா அதிபர் மதுரோ உறுதி செய்தார்..
இன்று அதிகாலை கராகஸில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட “இராணுவத் தாக்குதலை” தாம் நிராகரிப்பதாக வெனிசுலா அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல்கள் குறித்து இதுவரை பெண்டகன் மற்றும் வெள்ளை மாளிகை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.
இந்த தாக்குதல்களின் நோக்கம் வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை கைப்பற்றுவதுதான் என்று அரசு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு மக்களை உடனடியாக போராட்டத்திற்கு திரளுமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
“மக்கள் வீதிகளுக்கு வர வேண்டும். இந்த பேரரசு வாதத் தாக்குதலை எதிர்த்து அனைத்து சமூக, அரசியல் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளது..
அதிபர் நிக்கோலாஸ் மடுரோ, அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நாட்டில் “வெளிப்புற அச்சுறுத்தல் நிலை” (state of external disturbance) அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது.
இந்த தாக்குதல்கள் தலைநகர் கராகஸ் மட்டுமின்றி, மிராண்டா, அராகுவா, லா குவைரா மாநிலங்களிலும் பதிவாகியுள்ளதாக அரசு கூறியுள்ளது.
வாஷிங்டன் தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதி எதுவும் இல்லாத நிலையில், டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலாவில் உள்ள இராணுவ இலக்குகள் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது…
சனிக்கிழமை அதிகாலை கராகஸில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், கரும்புகை மேகங்கள் எழுந்ததாகவும், நகரின் சில பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே, வெனிசுலாவில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என ட்ரம்ப் பலமுறை கூறியிருந்தார். அதே சமயம், அமெரிக்கா கரீபியன் பகுதியில் விமானக் கப்பல், போர் கப்பல்கள் மற்றும் நவீன போர் விமானங்களை குவித்து பெரும் இராணுவத் தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் அதிக அளவில் போதைப் பொருட்கள் நுழைய வெனிசுலா தான் காரணம் என ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் தென் அமெரிக்காவிலிருந்து வரும் படகுகள் மீது கடந்த சில மாதங்களாக அமெரிக்கா வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ளார். தான் எந்த குற்றச்செயல்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்றும், வெனிசுவேலாவின் பெரும் எண்ணெய் வளங்களையும் அரிய கனிம வளங்களையும் கைப்பற்றுவதற்காகவே அமெரிக்கா தன்னை ஆட்சியிலிருந்து அகற்ற முயல்கிறது என்றும் கடுமையாக சாடியிருந்தார்…



