ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார்.
79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த ஹசன் கொஜஸ்தே பகெர்சாதே அவர்களின் சகோதரி ஆவார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியபோது, மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே தனது கணவர் காமெனியுடன் சேர்ந்து தெஹ்ரானில் உள்ள அவர்களின் வளாகத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலில் அவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அயத்துல்லா அலி காமெனியும், மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதேவும் 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். முஸ்தபா, மொஜ்தபா, மசூத், மேய்சம் என்ற 4 மகன்களும், ஹோதா, போஷ்ரா என 2 மகள்களும் உள்ளனர்.
ஈரான் பழிவாங்கும் என உறுதி
அயத்துல்லா அலி கமெனியின் மரணம், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. தனது உச்ச தலைவரின் மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியன் உரையாற்றும்போது, “எதிரியின் தளங்களை ஈரான் ராணுவம் பலமாக நொறுக்கும்” என்று கூறினார். காமெனியின் மரணத்தை, “முஸ்லிம்களுக்கு எதிரான போர் அறிவிப்பு” என்றும் அவர் விவரித்தார்.
“இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதனை திட்டமிட்டவர்கள் மீது பழிவாங்குவது, ஈரான் இஸ்லாமிய குடியரசின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் ஆகும்,” என்று அவர் தெரிவித்தார்..
வளைகுடா பகுதியில் தாக்குதல்கள்
இதனைத் தொடர்ந்து, ஈரான் வளைகுடா பகுதிகளில் உள்ள பல அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் ஆப்ரஹாம் லிங்கன் விமானக் கப்பல் மீது 4 பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் கூறியது. ஆனால், அமெரிக்க மத்திய கட்டளைப் படை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இதேபோல், இஸ்ரேலை நோக்கியும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமி நெதன்யாகு அவர்களின் அலுவலகம் குறிவைக்கப்பட்டதாக ஈரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் நிர்வாகம் இதை பொய்யான தகவல் என நிராகரித்துள்ளது.
ஈரானில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த மோதல் தொடங்கியதிலிருந்து குறைந்தது 555 ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் 130-க்கும் மேற்பட்ட நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


