அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பிரச்னை இல்லை, ஆனால் பாஜக இருப்பதால் அது முடியாது. பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்கள் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்களுடன் நட்பின் அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் அவருடன் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் திருச்சியில் நாங்கள் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடத்திய சூழலில் நாங்கள் தங்கியிருந்த அறையில் எனக்கு புத்தகத்தை பரிசளித்தார் அவ்வளவுதான். நானும் அரசியல் பேசவில்லை, அவரும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை.
கூட்டணி ஆட்சியில் விசிக பங்கு கேட்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்; அதற்கு ஆதரவான சூழல் இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அதிமுகவுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கிற சூழலில் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2015-16 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் கருத்தரங்கத்தில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். அப்போது நான் இந்த கருத்தை பேசிய போது பலரும் அதை நகைப்புக்குரியதாக பார்த்தார்கள் இன்றைக்கு அதை எல்லோரும் பேசுகிறார்கள்.
அன்றே அனைவரும் கை கொடுத்திருந்தால் வலு கூடி இருக்கும். இப்போது அவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள் அந்த கருத்தில் நாங்கள் மாறுபடவில்லை உடன்படுகிறோம். கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்கிற நிலைப்பாடு கிடையாது. ஆனால் அந்த கோரிக்கை வைக்கின்ற சூழல் கனியவில்லை என்றார்.