திண்டிவனம் வட்டாரத்தில் கடந்தாண்டு விதிமுறைகளை மீறியதாக அனைத்து ரக வாகனங்களுக்கும் 1 கோடியே 66 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், வானுார், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறி செல்லும் வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அபராதம் வசூலித்தல், ஓட்டுநர் உரிமம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி, தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல், விழுப்புரம் வழியாக செல்லும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில வாகனங்களையும் கண்டறிந்து அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்தவகையில், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மினி பஸ், ஓவர்லோடு வாகனங்கள், ஆம்னி, சுற்றுலா பஸ், ஷேர் ஆட்டோ உட்பட 3,385 வாகனங்களை சோதனை செய்துள்ளனர். இதில் விதிமுறைகளை மீறியதாக 481 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளி மாநில வாகனங்கள், சாலை வரி போன்றவற்றை செலுத்தாதது உட்பட விதிகளை மீறியதாக 26 லட்சத்து 45 ஆயிரம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போல் சாலை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களிடம் அபராத தொகையாக 1 கோடியே 66 லட்சத்து 43 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக நபர்களை ஏற்றிச் சென்ற 205 வாகனங்கள், அதிக சுமை ஏற்றி வந்த 390 கனகர வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டி வந்த 543 வாகன ஓட்டிகள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வந்த 588 வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், ‘ஹெட் லைட்’ அமைத்திருந்த 396 வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாத 387 வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விபத்துக்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை – திருச்சி பைபாஸ், திண்டிவனம் – புதுச்சேரி பைபாஸ் சாலைகளில் காரில் செல்வோர் பெரும்பாலும் இரவு நேரங்களில் துாக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்க இரவு நேரங்களில் ஓய்வெடுத்த பின் வாகனங்களை இயக்க வேண்டும். சீல் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.