பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை வாழ்ந்த திருவாரூரை சேர்ந்த வாலிபர் தனது காதலியை 9 மாத குழந்தையுடன் திருமணம் செய்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் தம்பதியினர் சொக்கலிங்கம் – புஷ்ப லதா. இவர்களின் மகன் ரமேஷ் அரவிந்தர் (33) பிலிப்பைன்ஸில் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே பிலிப்பைன்சில் வேலை பார்த்து வரும் ரமேஷ் அரவிந்தருக்கும் அதே நாட்டை சேர்ந்த ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ (22) என்ற பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ தொடங்கினர். இந்த ஜோடிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
2 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வந்த இவர்கள், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, தனது காதலி மற்றும் குழந்தையுடன் ரமேஷ் அரவிந்தர் சொந்த ஊருக்கு வந்தார். அவர்களுக்கு எளிய முறையில் திருமணம் செய்து முடித்து வைக்க பெற்றோர்களும் விரும்பினர். இதையடுத்து, ரமேஷ் அரவிந்தருக்கும் அவரது காதலி ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோவுக்கும் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் என்றாலும் மணமகள் தமிழக பெண்கள் போலவே புதுப்பட்டு உடுத்தி மணமேடையில் தனது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். மணமகன் ரமேஷ் அரவிந்தர் அவருக்கு கெட்டி மேளம் முழங்க கழுத்தில் தாலி கட்டினர். திருமணத்திற்கு வந்த உற்றார், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தியதோடு, குழந்தையையும் கொஞ்சி விட்டு சென்றனர்.
இதையடுத்து இருவரும் முறைப்படி திருமணத்தை முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்தனர். அப்போது அங்கு வந்த பொதுமக்களும் மணமக்களை ஆச்சர்யத்தோடு பார்த்ததோடு மனமார வாழ்த்திச் சென்றனர்.