மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். இந்த உரைக்குப் பிறகு, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) தாக்கல் செய்யப்படும். அந்தவகையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய அரசுக்கான தலைமை பொருளாதார ஆலோசகரால் தயாரிக்கப்படுகிறது. பொருளாதார ஆய்வறிக்கை நிதியமைச்சகத்தின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. ஆண்டு பொருளாதார வளர்ச்சி, குறுகிய கால மற்றும் நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி கணிப்பு உள்ளிட்டவற்றை பொருளாதார ஆய்வறிக்கை வழங்குகிறது.
சுருக்கமாக சொன்னால், நாட்டின் பொருளாதார சூழலை காட்டுவதே பொருளாதார ஆய்வறிக்கை. பொதுமக்களுக்கு நாட்டின் பொருளாதார நிலையை காட்டுவதற்காக தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கும் இந்த ஆய்வறிக்கை தேவைப்படுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இரண்டு பகுதிகளாக இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை தயார் செய்யப்படும். தாக்கல் செய்த பிறகு www.indiabudget.gov.in/economicsurvey என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பொதுமக்கள் இந்த ஆய்வறிக்கையை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.