கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கொண்டுவந்தது. பங்ளாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜெயினர்கள், பௌத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சிஏஏ சட்டத்தின் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது. மத்திய அரசின் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சரான சாந்தனு தாக்கூர், “சிஏஏ விரைவில் அமல்படுத்தப்படும். இந்தச் சட்டம் இன்னும் 7 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்றார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுதிக்க மாட்டோம். மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன் தமிழ்நாட்டினுள் சிஏஏ கால் வைக்க விடமாட்டோம்” என்றார்.