திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 2000க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றன.
இத்தகைய நிலையில், இந்த மருத்துவமனையின் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் ரவிச்சந்திரனின் பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், துணை முதல்வரான டாக்டர் சுரேஷ் பொறுப்பு முதல்வராக பணிகளை கவனித்து வந்தார்.
இத்தகைய நிலையில், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வராக பணிபுரிந்து வந்த டாக்டர் ரேவதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மருத்துவமனையின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஏற்கனவே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை முதல்வராக பதவி வகித்தவர் என்று சொல்லப்படுகின்ற நிலையில், அதன் பிறகு பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணிபுரிந்தார். அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவர் தற்சமயம் திருநெல்வேலிக்கு மறுபடியும் மாற்றம் செய்யப்பட்டு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.