தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வறிவிப்பின்படி நிகழாண்டில் அவர்களின் பிறந்தநாளையொட்டி பேரறிஞர் அண்ணா கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டி 15.09.2023 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் நிகழாண்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.
கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டி 1)அண்ணாவும் மேடைப் பேச்சும், 2) கடமை, கண்ணியம், கட்டுபாடு 3)மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 4) வாய்மையே வெல்லும், 5) ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.