லண்டனுக்கு வடக்கே நேற்று இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், ஒரு ரயில் ஓட்டுநர் உயிரிழந்தார், 80 பயணிகள் பலத்த காயமடைந்தனர். விபத்திலிருந்து தப்பிய ஒருவர், மோதலின் தாக்கத்தால் தான் முன்னோக்கி வீசப்பட்டதாகவும், பின்னர் பீதி மற்றும் குழப்பமான சூழலில் சக பயணிகள் எலும்பு முறிவு மற்றும் ரத்தக் காயங்களுடன் அவதிப்படுவதைக் கண்டதாகவும் கூறினார்.
ரயில் கண்காணிப்புத் தரவுகளின்படி, உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் பெட்ஃபோர்ட் நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.. இரண்டு ரயில்களும் லண்டன் செயின்ட் பான்கிராஸ் நிலையத்தை நோக்கி தெற்கு திசையில் சென்று கொண்டிருந்தது..
இந்த விபத்தை தொடர்ந்து, ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் பிரிவுகள், வான்வழி ஆம்புலன்ஸ் மற்றும் அபாயகரமான பகுதி மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, பெரிய அளவிலான அவசரக்கால மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விபத்தின் பயங்கரத்தை விவரிக்கும் பயணிகள்
“பலர் காயமடைந்துள்ளனர் என்பதையும், துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதையும் நாங்கள் அறிவோம்” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இது ஒரு பெரிய விபத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது; பெட்ஃபோர்ட்ஷயர் காவல்துறை மற்றும் உள்ளூர் தீயணைப்பு, மீட்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து எங்கள் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
பின்னால் வந்த ரயிலில் பயணித்த பீட்டர் நாப் என்பவர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த மோதல் நிகழ்ந்ததாகக் கூறினார். “முன்னால் இருந்த இருக்கையில் நான் தூக்கி வீசப்பட்டேன், பின்னர் புகையைக் கண்டேன். மக்கள் அழுதுகொண்டிருந்தனர், அலறிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் பயந்துபோய் குழப்பத்தில் இருந்தனர்,” என்று அவர் கூறினார்.
“நான் எழுந்து பார்த்தபோது, பேச முடியாத நிலையில் இருந்த மற்றும் கால்கள் உடைந்த பலரைக் கண்டேன்,” என்று நாப் மேலும் கூறினார். ரயில் கதவுகளில் இருந்த இடைவெளி வழியாக வெளியேறி தான் தப்பியதாக அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், டஜன் கணக்கான பயணிகள் தண்டவாளத்திற்கு அருகில் கூடியிருப்பதும், சிலர் மருத்துவச் சிகிச்சை பெறுவதும், ரயில் பாதைக்கு இணையாகச் செல்லும் சாலையில் அவசரக்கால வாகனங்கள் வரிசையாக நின்றிருப்பதும் காணப்பட்டன.
ரயில்வே ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் RMT தொழிற்சங்கம், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் ரயில் ஊழியர்கள் பலத்த காயமடைந்ததாக வரும் செய்திகள் குறித்து கவலை தெரிவிப்பதாகவும் கூறியது.
கார்பியிலிருந்து லண்டன் செயின்ட் பான்கிராஸ் செல்லும் மாலை 4:40 மணி ரயில் சேவையும், நாட்டிங்ஹாமிலிருந்து செயின்ட் பான்கிராஸ் செல்லும் மாலை 3:50 மணி ரயில் சேவையும் இந்த மோதலில் ஈடுபட்டதாக ‘ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வே’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் லண்டன் செயின்ட் பான்கிராஸ் நிலையத்திற்கான அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.. மேலும், விசாரணை மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் சனிக்கிழமைக்கான ரயில் அட்டவணை குறித்த விவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அது கூறியது.
Read More : ‘நானோ அல்லது இத்தாலியோ ஒருபோதும் கெஞ்சுவதில்லை’.. டிரம்பின் கருத்துக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி..!



