தஞ்சாவூர் அருகே பள்ளி வேன் பின்புறம் பைக் மோதிய விபத்தில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் (21), பாண்டி (20) மற்றும் நிரஞ்சன் (23). நெருங்கிய நண்பர்களான மூவரும் மைக்செட் அமைக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். நேற்று ஒரத்தநாடு பகுதியில் மைக்செட் அமைக்கும் வேலையை முடித்துவிட்டு, ஒரே பைக்கில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தஞ்சை – ஒரத்தநாடு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளி வேன் திடீரென நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த இவர்களது பைக், கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வேனின் பின்புறத்தில் மோதியது. இதில் மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயமடைந்த பிரபாகரன் (21) , விபத்து நடந்த இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது நிரஞ்சன் (23) தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வேனில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Read more: மோர் நல்லது தான்.. ஆனால் இவர்கள் தொடவேக் கூடாது.. அவ்வளவு ஆபத்து..!



