திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்தவர் கலைஞர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் தான்.
2018ஆம் ஆண்டு கலைஞர் மறைவுக்கு பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவர் பொறுப்புக்கு வந்தார். 2020ஆம் ஆண்டு பேராசிரியர் மறைவுக்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவி சீனியரான துரைமுருகனுக்கு தரப்பட்டது. தற்போது துரைமுருகனுக்கு ஓய்வளித்து விட்டு அந்த இடத்திற்கு உதயநிதியை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.
காரணம் என்னவென்றால், பல நேரங்களில் துரைமுருகனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் கட்சி பதவியோ, அமைச்சர் பதவியோ உடனடியாக பிடுங்கப்படும். ஆனால் சீனியர் என்பதால் துரைமுருகன் பதவி மீது கை வைக்கப்படவில்லை.
சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இதில் துரை முருகனுக்கு கொஞ்சம் மனவருத்தம் உண்டு என்று கட்சியினர் பரவலாக பேசுகின்றனர். இப்போது அண்ணா அறிவாலயத்திற்கு கூட தினமும் வருவதில்லை. ஏதாவது முக்கிய ஆலோசனை நடைபெறும் பட்சத்தில் வந்து செல்கிறார் என கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் துரைமுருகன் பெயர் இடம் பெறவில்லை. இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர். தொடர்ந்து துரைமுருகன் புறக்கணிக்கப்படும் நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் துரைமுருகன் விடுவிக்கப்படலாம் என பேச்சுகள் எழுகிறது.
முன்னதாக துரைமுருகன் நீக்கப்பட்டு டி.ஆர்.பாலு நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகின.. இந்த நிலையில் அன்பழகனுக்கு பிறகு பொதுச்செயலாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலினே திமும பொதுச்செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
Read more: விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு .. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!