நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசை அறிக்கையின்படி, அனைத்து குரூப் ஏ அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் UIDAI தொடர்ந்து இரண்டாவது மாதமாக முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் பெறப்பட்ட பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதிலும், ஆதார் அடையாள அட்டைதாரர்களின் புகார்களை சரி செய்வதில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சிறந்து விளங்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அதன் குறை தீர்க்கும் முறையை மேலும் வலுப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் படிப்படியாக அதிநவீன அமைப்புடன் கூடிய வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மூலம் மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட முடிவு செய்துள்ளது.