உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் நடந்த இரட்டை கொலை வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பேஷ் என்ற பொறியாளர் தனது பெற்றோர்களான ஷியாம் பகதூர் (62) மற்றும் பபிதா (60) ஆகியோரைக் கொன்று, உடல்களை ரம்பத்தால் துண்டாக்கி ஆற்றில் வீசியுள்ளார்.
டிசம்பர் 13ஆம் தேதி, ஜான்பூர் ஜஃபராபாத் காவல் நிலையத்தில், தம்பதியர் காணாமல் போனதாக அவரது மகள் வந்தனா புகார் அளித்தார். டிசம்பர் 8ஆம் தேதி மகன் அம்பேஷ் உடனான வாக்குவாதத்திற்கு பிறகு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் புகாரில் தெரிவித்தார். அன்றைய தினம் அம்பேஷின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விசாரணையில், அம்பேஷ் தனது பெற்றோர் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ததை ஏற்க மறுத்ததால் குடும்பத்தில் நீண்டகால மோதல் இருந்து வந்தது தெரியவந்தது. பெற்றோரின் அழுத்தத்தால் மனைவியை பிரிய முடிவெடுத்து விவாகத்து பெற்றார். ஆனால் மனைவிக்கு கொடுக்க ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தேவைப்பட்ட நிலையில், தந்தையிடம் உதவி கேட்டுள்ளார்.
பணம் தர தந்தை மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்து வந்த அம்பேஷ் தாய் தந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி இருவரையும் கொலை செய்துள்ளார். தொடர்ந்து ஆதாரங்களை அழிக்க, ரம்பத்தால் உடல்களை துண்டாக்கி, சாக்குகளில் அடைத்து, காரில் கொண்டு சென்று ஆற்றில் வீசியுள்ளார்.
பின்னர் ஆறு நாட்கள் தலைமறைவாக இருந்த அம்பேஷ், டிசம்பர் 14ஆம் தேதி ஜான்பூருக்கு திரும்பியபோது போலீஸில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் உடல் பாகங்கள், கொலையில் பயன்படுத்தப்பட்ட ரம்பம் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



