சீமான் மீதான புகாரில் இன்று நடிகை விஜயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்தார். அதன் அடிப்படையிலும், அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, காவல்துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011இல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்குப் பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என சீமான் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், 2011 மற்றும் 2023ஆம் ஆண்டில் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், 2011இல் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், அந்த வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப்.29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். இதற்கிடையே, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், சீமான் மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற முறையீட்டின் அடிப்படையில் இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதனால் பழைய உத்தரவின்படி விஜயலட்சுமி இன்றைய தினம் ஆஜராவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, சீமான் மாமா என்னால் உங்களை விட்டு விட்டு இருக்க முடியாது என வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் இந்த வழக்கை மீண்டும் பகடைக்காயாக கையில் எடுத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.