கடந்த ஒரு மாதமாகவே சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதாவது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் பரவி வருகிறது.. பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டால் 3 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல், சளி, இருமலுடன் சேர்ந்து 5 நாட்களுக்கு மேல் தொடர்வதாக கூறப்படுகிறது.. ஒருவேளை காய்ச்சல் குணமானாலும் கூட, சளி, இருமல், சோர்வு ஆகியவை 10 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது.. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகமாக ஏற்படுவதால், பல குழந்தைகள் ஒரு வாரத்துக்கு மேல் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

பெரும்பாலும் இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். அங்கு வழக்கம் போல பாராசிட்டமால், அமாக்சிலின் போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகிறது.. அதே நேரம், 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி நீடித்தால் மேற்கூறிய மருந்துகளுடன் சிட்ரிசைன், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற மருந்துகளும் வழங்கப்படுகிறது..
அதன் பின்னரும் சளி, இருமல், சோர்வு நீடிக்கும் நிலையில், ரத்த வெள்ளை அணு, சிவப்பணு, கல்லீரல் செயல்பாடு பரிசோதனை, டெங்கு, ஃபுளூ காய்ச்சல், மார்பக எக்ஸ்ரே போன்ற 10-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் மேற்கூறிய பரிசோதனைகளை செய்ய சுமார் ரூ.8,500 முதல், ரூ.12,000 செலவாவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்று சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.. இதனிடையே, அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் நிலவுவதாலும், குளிர் அதிகரித்திருப்பதாலும் வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாக பரவுகின்றன. இது அச்சப்படக்கூடிய காய்ச்சல் இல்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்..
மேலும் “ மாநகராட்சி சார்பில் 140 க்கும் மேற்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்கள், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்ட நெரிசலில் செல்லும் போது மாஸ்க் அணிவது, கைகளை முறையாக கழுவுவது ஆகியவை மூலம் வைரஸ் காய்ச்சல் பரவலில் இருந்து தப்பிக்கலாம்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளது…